Friday, October 07, 2005

குறள்

உயரம்!
திருவள்ளுவர் ஒரு பள்ளிக்கூட இலக்கிய மன்ற விழாவுக்குப் பேசப் போனார்... ஒரு கற்பனைதான்! மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார்.

"தாமரைப் பூவின் உயரம் என்ன?"

ஒருவன் மற்றவனைப் பார்த்தான். அவன் அடுத்தவனைப் பார்த்தான். இது மாணவர்கள் டெக்னிக். அடுத்தவனை பார்த்துவிட்டால் கேள்வியை தூக்கி அவன் தலைமேல் போட்டதாக அர்த்தம்!

ஒரு மாணவன் உத்தேசமாக சொன்னான்: "தாமரையின் உயரம் இரண்டரை அடி".

திருவள்ளுவர் கேட்டார்: "ஏன் நாலடி இருக்காதோ?"

பளிச்சென்று பையன் சொன்னான்: "வைச்சுக்குங்க..எனக்கென்ன? அது என்ன எங்க வீட்டுத் தாமரையா? உங்க வீட்டுத் தாமரையா?".

மாணவர்களோடு சேர்ந்து வள்ளுவரும் சிரித்தார். ஆனால், "ஒருவருக்கும் உண்மை தெரியவில்லையா?" என்று வருத்தத்தோடு வினவினார்.

ஒரு புத்திசாலிப் பையன் எழுந்து சொன்னான்: "ஐயா, உங்கள் கேள்வி தவறு. தாமரைக்கு ஏது உயரம்? தண்ணீரின் உயரம், தாமரையின் உயரம். தண்ணீர் மேலே போகப் போகத் தாமரை மேலே போகும். தண்ணீருக்கு மேலே இருப்பதுதான் தாமரையின் இலட்சியம்."

திருவள்ளுவர் மகிழ்ந்து போனார்: "சபாஷ்..வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன? "
மாணவன் சொன்னான்: "என்னுடைய உயரம் என் எண்ணத்தின் உயரம்"
வெள்ளத் தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு – குறள்

-"நல்ல வண்ணம் வாழலாம்" என்ற புத்தகத்தில் சுகி.சிவம்

2 comments:

cheena (சீனா) said...

அட்டகாசமான கதை - குறும்புச் சிறுவன் - வள்ளுவரின் இக்குறளுக்கு தனிச் சிறப்பு உண்டு - மற்ற 1329 குறள்களுக்கு இல்லாத சிறப்பு

நல்வாழ்த்துகள் வேல்

shanevel said...

குறள் நம் தமிழ்நாட்டின் என்றும் பெருமைக்குரியது...தற்போது... இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறளை வைத்து ஒரு இசைக்கோவை செய்யப்போவதாய் செய்தி வந்துள்ளது..
மகிழ்ச்சியாக இருக்கிறது..