Tuesday, December 28, 2010

மீண்டும் வருகிறேன்...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

நான் மீண்டும் எழுத வருகிறேன்... என்ன எழுத போகிறேன் ... என்பதெல்லாம் எனக்கே தெரிய வில்லை...:)

Monday, March 23, 2009

படித்து ரசித்த புத்தகங்கள் (1)

ஓடும் நதியின் ஓசை…(இரண்டு பாகங்கள்)

வெ.இறையன்பு இ.ஆ.ப

வெளியீடு: நியு செஞ்சுரி புக்  ஹவுஸ்(பி) லிட்

new photos mar

 

ஆனால் வெளியிட்ட இரண்டு பாகங்களில் முதல் பாகம் மட்டுமே படித்திருக்கிறேன்.

இரண்டாம் பாகமும் அருமையா இருக்கும் என்று படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

முதல் பாகத்தில் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு…

உணவும் உணர்வும்

ஒருநாள் காலையில் என் நலனில் அதிக அக்கறை கொண்ட நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.

“காலை உணவைச் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று கேட்டார்.

“இன்று நிறைய எழுதவேண்டியிருந்தது. வாரப்பத்திரிகைக்கு ஒத்துக்கொண்டிருக்கும் கட்டுரைக்கான கெடு இன்றோடு முடிந்துவிட்டது. எனவே சாப்பிட நேரம் கிடைக்கவில்லை.”

“சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?”

“பத்து நிமிடத்தைக்கூட ஒதுக்க முடியாத அளவு நீங்கள் பிரபலமானவரா?”

அவர்சுட்டிக்காட்டிய உண்மை என்னைச் சுட்டது.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்காவில் பெரிய நூலகங்களிலெல்லாம் வாஷிங்டன், ஜெஃபர்சன், ஃப்ராங்ளின், லிங்கன் போன்றோருடைய புகைப்படங்களை எல்லாம் மாட்டி ‘இவர்கள் ஒரு போதும் காலை உணவைத் தவற விட்டதில்லை’ என்று எழுதிவைத்திருப்பார்கள். அவர்களைக்காட்டிலும் நீங்கள் பெரிய மனிதரா?”

அந்த கேள்வி என்னை வெகுவாக சிந்திக்கவைத்தது.

அதற்கு பிறகு ஒருநாளும் நான் காலை உணவைத் தவற விட்டதில்லை. ‘இரவுக்கும் காலைக்குமான இடைவெளி அதிகம் என்பதால் காலை உணவை மட்டும் விலக்கக்கூடாது. அது உடலை வெகுவாகப் பாதித்துவிடும்’ என்று என்னைக் கேள்வி கேட்ட நண்பரே விளக்கம் சொன்னார். ஒரு வகையில் நாம் உணவைத்தான் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்துகிறோமோ என்ற எண்ணம் எழுகிறது.

பெற்றோர்கள் மீது கோபமா – அதத உணவின் மீது காட்டுகிறோம்.

சகோதரர்களுடன் சண்டையா, சாப்பிடாமலிருக்கிறோம்.

உணவைப் புறக்கணிப்பதன் மூலம் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். சாப்பிடாமலிருப்பது ஒரு சின்ன தற்கொலை; அதன் மூலம் யாரையோ மறைமுகமாக இம்சிக்க நினைக்கிறோம்.

சாப்பிடும்போதே தட்டில் கைகளைக் கழுவி நம் வெறுப்பை உமிழ்கிறோம். சாப்பாடு என்ன செய்யும்? அதற்கும் நம் செய்கைக்கும் என்ன சம்பந்தம். எத்தனை நாட்கள் நாம் ஆற அமர சாப்பிட்டிருக்கிறோம்? ஒவ்வொரு பருக்கையாக ரசித்து ஒவ்வொரு துளியாக ருசித்து விழிப்புணர்வுடன் சாப்பிடும் போது நம்மையே நாம் உணவாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா?

தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். இதுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான வேளைகள் நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் எத்தனை முறை முழுவதுமாக கவன்ம் சிதறாமல், சாப்பிடும் போது தர்க்கம் செய்யாமல், அதிகம் பேசாமல் அமைதியாக ஒவ்வொரு துளியையும் உள்வாங்கிக் கொண்டு ‘இந்த உணவு எனக்குக் கிடைத்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்ற மரியாதை உணர்வோடு நாம் சாப்பிட்டிருப்போம்?

=============================================================

இப்படி போகிறது கட்டுரை… சிந்திக்க வைக்கும் வகையில் பல கட்டுரைகள் இருப்பதால், கண்டிப்பாக இந்த இரண்டு பாகங்களும் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். பரிசளிக்க அருமையான புத்தகங்களுள் இதுவும் ஒன்று…!

இதை நான் எழுதுவது…

இனி…படித்ததில் பிடித்தது என்று இந்த வலைத்தளத்தில் எழுதுவது விண்டோஸ் லைவ் ரைட்டர் என்கிற வலைத்தள மென்பொருள் மூலம்… இது எப்படி இருக்கும் என்கிற ஆவலுடன் இனிமேல் என்னுடைய வாசிப்பில் படித்ததில் பிடித்தவைகளை… அடிக்கடி பார்க்கலாம்..

 

 

flow3

Monday, November 17, 2008

தாய்



மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையால்
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

ஆக்கம்: பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி மலரில் வந்தது(ஆனந்தவிகடனிலும் பிரசுரம்)

Thursday, September 04, 2008

எல்லோரும் நலம் வாழ..


அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார்.
அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது.
தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார்.
“தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்களுக்கு ஆண்டுதோறும் முதல் பரிசு கிடைக்கிறது. ஆனால், அதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டால், உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு குறைந்துவிடாதா? அவர்களும் உங்களோடு போட்டியில் கலந்து கொள்பவர்கள்தானே!”
அதிகாரியை பார்த்து புன்னகைத்த விவசாயி சொன்னார்.
“இயற்கையாகவே, முற்றின சோளமணிகள் காற்றின் மூலம் பரவி, ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்துக்குப் போய் விழும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! என் வயலைச் சுற்றியுள்ள விவசாயிகள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டிருந்தால், அவை காற்றின் மூலம் என் வயலில் வந்து விழும் வாய்ப்புள்ளது. அப்படி விழுந்தால், கலப்பினப் பெருக்கத்தின் மூலம், என் வயலில் வரும் விளைச்சல் தரம் குறைந்த்தாகி விடாதா? நான் தரமான சோளத்தை விளைவிக்க நான் உதவ வேண்டும் இல்லையா? அதைத்தான் நான் செய்கிறேன்!”
பக்கத்து நிலங்களில் விளையும் சோளத்தின் தரம் மேம்படாவிட்டால், தன் சோளத்தின் தரமும் மேம்படாது என்ற விவசாய அரிச்சுவடியை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் அந்த விவசாயி!
இந்த விதி விவசாயத்துக்கு மட்டும்தானா?
சமாதானத்தையும் நிம்மதியையும் விரும்பும் ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிம்மதியாக இருக்க உதவ வேண்டாமா? நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் நன்றாக வாழ உதவ வேண்டாமா? சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவ வேண்டாமா?
வாழ்க்கையில் எந்த ஒருவரது நலனும் மகிழ்ச்சியும் அந்த தனி மனிதரை மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. அது அவரை சுற்றியுள்ளோரின் நலனையும் மகிழ்ச்சியும் பொறுத்தே அமைகிறது.
- “மல்லிகை மகள்- செப்டம்பர்’2008 இதழ்- தலையங்கம்”

Wednesday, January 25, 2006

சிற்பியைத் தேடும் கல்

'ஒரு ஊருக்குள்
ஆளுயரக் கல்லொன்று
வந்து விழுந்தது!

பஞ்சாயத்து கூடியது!

என்ன செய்வது கல்லை?

'திருநாவுக்கரசரைக்
கல்லில் கட்டிக்
கடலில் போட்டது மாதிரி

நம்மூர் எம்.எல்.ஏ.வை
இக்கல்லில் கட்டிக்
கிணற்றில் போடலாம்
என்றனர் சிலர்.

பஞ்சாயத்துத் திண்ணையிலே
போட்டு வைத்தால்
தலையணை இல்லாத குறை
தீருமென்றார்கள்
கொட்டாவி விட்டுக் கொண்டே சிலர்.

கல்லுக்குக் குங்குமம் வைத்து
சூடம் காட்டி
வழிபடத் துவங்கினான் ஒருவன்!

கல்லை வணங்குகிறவன்
முட்டாள் என்று
கத்திக் கொண்டே
ஓடி வந்தான் இன்னொருவன் !

இருவருக்கும் கைகலப்பு நடந்தது.

புரட்சி செய்யப் போவதாய்
தன்னை அறிவித்துக் கொள்ளும்
ஒருவன்,
'பூர்ஷுவா பூர்ஷுவா' என்று
கல்லை உதைத்தான் !

அவனை சூழ்ந்துக் கொண்டு
சிலர் உதைத்தார்கள் !
கல்லை யார் வீட்டுக்குத்
துணி துவைப்பதற்காக
எடுத்துப் போவதென்று
ஊர்ப் பெண்கள்
குடுமிப் பிடித்தனர் !
கல்லைப் பற்றி
கவிதைப் பாடினார்
ஒரு கவிஞர்.

கல்லைப் பற்றிப் பாடும்
கவிஞனின் மனசு
கல்லாகவே
இருக்குமென்றர்
ஒரு விமர்சகர்.

இருவருக்கும் சண்டை
தொடங்கியது.

அந்த நேரத்தில் ஒரு
சிற்பி வந்தான்.
கல்லை அணுகித் தட்டினான்.
உளி எடுத்தான்.

உளிச்சத்தம் கேட்டு
'ஊர்' சண்டை ஓய்ந்து
வேடிக்கை பார்த்தது !

சில நாழிகையில்
அந்த
ஆளுயரக் கல்லில்
காந்தி சொன்ன
மூன்று குரங்கு பொம்மைகளை
வடித்தான் சிற்பி !

செதுக்கச் செதுக்க
உதிர்ந்த
கல் பொடியைக்
குவித்து
மூட்டை கட்டி
'கோலப் பொடி'
என்று
அதில் எழுதி
வைத்தான்.

புறப்பட்டான் சிற்பி !

ஊர் அதிர்ந்து
நின்றது !

இந்தியாவில் பல
பதவிகள்
இப்படிக்
கற்களாகவே
இருக்கின்றன !
நல்ல சிற்பிகள்
கிடைப்பார்களா?

Tuesday, January 03, 2006

பருக்கை

ஒரு காட்சியைப் பார்த்து அதனால் பிரமித்து அது நமக்குள் நிகழ்த்துகிற மாற்றத்தினால் கிளறப்பட்டு நமது தூரிகையில் நாம் ஒரு ஓவியம் தீட்டுகிறோமோ... அதைப் பற்றித்தான் பேசுகிறேன்.

அச்சுப் போன்று காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல்தான் படைப்பாளியின் மனம். அந்த ஈரத்தை வாழ்வின் உச்சக்கட்டமான வெப்பத்தின் மத்தியிலும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
திரும்ப திரும்ப யோசித்தாலும் மிகச் சில விஷயங்கள்தான் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.
ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறி விட்டது. எனது மாமா புன்னகையோடு சொன்னார். ..."இந்த பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம் !"

நான் வியப்பாக "ஏன் ?" என்றேன்.

"இந்த பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்துமேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில.. அப்படியினு எத்தனை இடங்கள் ! எங்கேயும் தவறாம அதனோட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்திச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்துடுச்சே.. எவ்வளவு பாவம் அது...!"

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் !

- "சினிமாவும் நானும்" என்ற புத்தகத்தில் இயக்குநர் மகேந்திரன்

Saturday, November 05, 2005

மனத்தை அடக்குவதுதான் ...!

"மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்த குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் பொதுவாகவே சஞ்சல மனம் படைத்தவை; அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்த குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது தீராத சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததினால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லாப் பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!"
-சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்